Tuesday, February 28, 2012

மற்றவை - பாடல் விமர்சனம்

துவரை நிறைய சினிமா படங்களுக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். ஆனால் ஒரு முறை கூட, பாடலுக்கு விமர்சனம் எழுதவில்லை. அதனால் இந்தப் பதிவின் மூலம் பாடலுக்கும் விமர்சனம் எழுதும் வழக்கத்தை ஆரம்பிக்கின்றேன்.

எதேச்சையாக நான் யுவனின் இசையில் வெளியான "கழுகு" படத்தின் பாடல்களைக் கேட்டேன். அதனைப் பற்றிய விமர்சனம் இங்கே.

"கழுகு" படத்தின் பாடல்களைக் கேட்ட போது, மங்காத்தா-விற்கப்புறம்  யுவனுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமைந்தது இதுவாகத்தான் இருக்கும் என்று தோனியது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.

1. "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்" என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை சத்யன், கிருஷ்ணராஜ், வேல்முருகன் பாடியுள்ளனர். சினேகன் எழுதியிருக்கிறார்.

இன்றைய நாகரீக உலகில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான காதல் எப்படிப்பட்டது என்பதை அன்றைய காதலுடன் வேறுபடுத்தி, மிகச் சாதாரண வரிகளைப் போட்டு, சினேகன் எழுதியிருக்கிறார். வரிகள் ஒவ்வொன்றும் ஷார்ப்பாக இருக்கிறது. ஃபோக்(Folk) சாயலில் இருக்கும் இந்தப் பாட்டு கேட்பதற்கும் நன்றாக உள்ளது.

அனேகமாக படம் வெளியாகும் சமயம் இந்தப் பாடல் அனைத்துச் சேனல்களிலும் தினமும் காட்டப்படலாம். கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பாட்டு நிச்சயம் இன்னொரு "வாரணம் ஆயிரம்-அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல" போல இருக்கும்.

பாடல் வரிகள்:

[பல்லவி]
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்,
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்...
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்,
அது எப்போதுமே போதையான நெலவரம்... (2)

அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு,
அது காதலிலே ஒலகத்தையே மறந்துச்சு...
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதேயில்ல.. அது மறஞ்சேதேயில்ல...
தெனம் ஜோடி ஜோடியா இங்க செத்து கிடக்கும்டா
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா..


[சரணம்]
நீ சொல்லும் காதல் எல்லாம் மலையேறிப் போச்சு செத்து
தும்மல போல வந்து போகுது இந்த காதலு...
காதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துராங்க,
டப்பு குறைஞ்சா மப்பு குறைஞ்சா தள்ளி போறாங்க..

காதல் எல்லாமே ஒரு கண்ணாமுச்சி,
இதில் ஆணும் பெண்ணுமே தெனம் காணாபோச்சு
காதலிலே தற்கொலைகள் குறைஞ்சே போச்சி..
அட உண்மை காதலே இல்ல சித்தப்பு,
இங்க ஒருத்தன் சாவுரான் ஆனா ஒருத்தன் வாழுரான்..
அட என்னடா உலகம் இதில் எத்தனை கலகம்
இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம்...


[பல்லவி]
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்,
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்...


[சரணம்]
இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி,
கண்ணப்பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது...
எல்லாம் முடிந்த பின்னும் ஃபிரண்டுனு சொல்லிகிட்டு
வாழுறவுங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா..
இப்ப காதல் தோத்துடா யாரும் சாவதே இல்ல
அடப் பொண்ணு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
இப்பெல்லாம் தேவதாசு எவனும் இல்ல

அவன் பொழுது போக்குக்கு ஒரு ஃபிகரப் பாக்குறான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூசு தேடுறா..
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறான்
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுறான்
(2)

MP3 ஆடியோ:

        


Download Mp3 Link:

http://66.151.148.5/files/55228753_B5Fw3_a548/Aambalaikum%20Pombalaikum%20-%20TamilWire.com.mp3

2. "ஆத்தாடி மனசுதான்" -இந்தப் பாடலை கார்த்திக் ராஜா ஒருமுறையும், பிரியா ஹிமேஸ்-ம் ஒருமுறையும் பாடியுள்ளனர்.

அருமையான சூத்திங்க்(Soothing) மெலடி. கார்த்திக் ராஜாவின் குரலில் கேட்கும் போது, "பருத்திவீரன்-அறியாத வயசு" என் ஞாபகத்திற்கு வந்தது. பிரியாவின் குரலிலும் கேட்பதற்கு இதமான மெலடியாக இருந்தது. நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார்.

பாடல் வரிகள்:

[பல்லவி]
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது..
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே...

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது


[பல்லவி]
கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தொட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே காய்ச்சலா மாறும்
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் பாசம்
இந்த காதில் வீசுது
விழி தெருவில் பார்க்கும் உனை
உறவை தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் ஒப்பாது உன் பேர சொல்வேன்டா ( ஆத்தாடி...)


[பல்லவி]
ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள,
பேச தைரியம் இல்ல
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல...

காலம் முழுதும் நாளும்,
உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே ஆகனும்
உன்ன தவிர என்ன வேணும்,
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வழாம
மண்ணோடு சாயாதடா...


MP3 ஆடியோ:
கார்த்திக் ராஜாவின் குரலில்.

       

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55229304_BMYMw_80e0/Aathadi%20Manasudhan%20II%20-%20TamilWire.com.mp3

பிரியாவின் குரலில்..

     

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55229016_fHx8i_aa20/Aathadi%20Manasudhan%20-%20TamilWire.com.mp3

3. "பாதகத்தி" யுவனின் குரலில் இன்னுமொரு மெலடியாக இது உள்ளது. கேட்கலாம். ட்யூன் வித்தியாசமாக உள்ளது. சினேகன் எழுதியிருக்கிறார்.

MP3 ஆடியோ:

     

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55228722_paRdT_1ae6/Paathagathi%20Kannupattu%20-%20TamilWire.com.mp3


4. "வாடி வாடி" - புஷ்பவனம் குப்புசாமி,அனிதா பாடிய இந்தப் பாட்டும் ஃபோக்(Folk) ஸ்டைலில் உள்ளது. கேட்கலாம். சினேகன் எழுதியிருக்கிறார்.

MP3 ஆடியோ:

      

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55229275_Xnmid_74e7/Vaadi%20Vaadi%20-%20TamilWire.com.mp3


###############################################################


Monday, February 27, 2012

கேள்வி - பதில் : 10

1.கேள்வி: இன்றைய அரசியல்வாதிகளிடத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்திருப்பதுபோல், அன்றைய குறுநில மன்னர்களிடத்திலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் இருந்ததா?
[செல்வன்,கரூர்]


பதில்:
தாராளமாக! மனிதனுக்கு, மூளை வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து லஞ்சமும் ஊழலும் ஆரம்பித்து விட்டன. அந்தக் கால மன்னர்கள் "கப்பம்" என்ற பெயரில் லஞ்சம் வாங்கினார்கள்! சில மொகலாய மன்னர்கள் ஆட்சியில் இலஞ்சம் தலைவிரித்தாடியது உண்டு. ஒளரங்கசீப் மகன் காம்பக்ஷ், சிவாஜியின் வாரிசு ராஜாராமுக்கு செஞ்சியில் லஞ்சம் கொடுத்து "சமாதான உடன்படிக்கை" செய்து கொண்ட விசயம் ஒளரங்கசீப்பிற்கு தெரியவந்து, கோபத்தில் மகனையே சிறையில் தள்ளினார். பிறகு வெள்ளைக்காரர்களும், நம்ம குறுநில மன்னர்கள் பலருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வழிக்கு கொண்டுவந்தார்கள்.ஆகவே, அன்றைய மன்னர்களும் சரி, இன்றைய ஜனநாயக மன்னர்களுக்கும் சரி, லஞ்சமே மஞ்சம். அது இல்லாதவர்கள் மிகவும் அரிது.

2. கேள்வி:
டாக்டர், ஆசிரியர் - ஒரு சமூகத்தில் யாருடைய பங்கு மிக அவசியம்?
[சசி,கோவை]




பதில்:
ஆபத்து சமயத்தில் டாக்டர் தேவை. ஆசிரியர் எப்போதும் தேவை! ஆசிரியர்கள் எதிர்கால சமுதாயத்தையே உருவாக்குகிறவர்கள். அப்படி உருவாகும் சமுதாயம் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

3. கேள்வி:
"எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்" என்று அடிக்கடி கூறுகிறார்களே. அதென்ன ஆயிரத்தெட்டு! வேற நம்பர் இல்லையா? அதில் என்ன அப்படி விசேஷம்?
[சதிஷ்குமார்,திருச்சி]


பதில்:
என்னுடைய ஆராய்ச்சியின்படி அது ஆயிரத்தட்டு! அதாவது 'ஆயிரம் தட்டுகள்' கொள்ளும் அளவுக்குப் பிரச்சனைகள்! பிற்பாடு அது மருவி 'ஆயிரத்தெட்டு' என்றாகியிருக்கும்.

4. கேள்வி:
குழந்தைகள் சொல்வதை, காது கொடுத்துக் கேட்கும் வழக்கம் உண்டா?
[மனோ,கோவை]

 

பதில்:
நிச்சயமாக! சில சமயம் குழந்தைகள் பெரியவர்களுக்கேகூட வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிய வைப்பார்கள்! பலர் காது கொடுத்து கேட்பதில்லை. அது அவர்களின் துரதிர்ஷ்டம். குழந்தைகளின் தூண்டுதலால் பெரிய சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. யூ.எஸ்.-ஸில், ஸாண்ட்டாஃபே என்கிற ஊரில் எட்வின்லேண்ட் என்பவர் தன் மூன்று வயது மகளோடு கண்காட்சி ஒன்றை, சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தன் மகளை போட்டோ பிடிக்க, "இப்பவே அந்த போட்டோவைப் பார்க்கணும்!" என்று குழந்தை அடம்பிடிக்க, "உடனே போட்டோ வராதும்மா கண்ணா!" என்று தந்தை சமாதானப்படுத்த, "எல்லாம் வரவைக்க முடியும்.இல்லேன்னா உடனே போட்டோ வரமாதிரி ஒரு கேமரா வாங்கித்தாங்க!" என்று தொடர்ந்து பிடிவாதம் பிடிக்க, எட்வின் லேண்ட் கண்டுபிடித்ததுதான் இன்று உலலெங்கும் விற்பனையாகும் போலராய்டு கேமரா!

5. கேள்வி:
ஒவ்வொரு விசயங்களையும் குழந்தைகளுக்கு எப்படி கற்றுத்தரவேண்டும்?
[மனோ,கோவை]

 

பதில்:
ஒரு குட்டிக் கதை.
பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த, வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்.. “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல..”

இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக் கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக் கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.


இந்தக் கதையைப் படித்ததும் இப்போது, உங்களுக்கு "எதைச் செய்யனும்!எதைச் செய்யக்கூடாது" என்று தெரிந்திருக்குமே!

############################################################


Sunday, February 26, 2012

மாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்(2)

ள்ளிகளின் கல்வி முறையைப் பற்றியும் அதனை மாற்றுவது பற்றியும் சென்ற பதிவில்  நான் சொல்லியிருந்தேன். பதிவின் தொடர்ச்சியை உடனே வெளியிட முடியவில்லை(கொஞ்சம் வேலை இருந்ததால்..!). பதிவின் தொடர்ச்சியை இப்போது இங்கு வெளியிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள். அப்புறம் பதிவின் முதல் பகுதியைப் படித்து விட்டு இந்தப் பதிவைப் படிக்கவும். இல்லையேல் நான் பதிவு எழுதிய நோக்கம் நிறைவேறாது.


முதல் பகுதியின் லிங்க் :

மாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்


இதன் தொடர்ச்சி....

2.பள்ளிகளின் வணிக நோக்கத்தை ஒட்டிய நிர்வாகம்:

தனியார் பள்ளிகளின் செயல்களை வைத்துத்தான் இரண்டாவது காரணத்தை நான் இங்கு சொல்லியுள்ளேன். அதற்காக அரசுப் பள்ளிகளை நான் பாராட்டவில்லை என்றில்லை. அங்கும் தவறிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு "எப்போது சம்பளம் வரும் 30ந்த் தேதியா?31ந்த் தேதியா?" என்ற விசயத்தில் இருக்கும் ஆர்வத்தை விட கற்பித்தலுக்கு தரும் ஆர்வம் மிகவும் குறைவு. மேலும் தான் ஒரு கவர்ன்மெண்ட் சர்வெண்ட்..தன்னை எவரும் அச்சுறுத்த முடியாது என்ற எண்ணத்தையும் அவர்கள் கொண்டிருப்பதால் கற்பித்தலை ஒரு தலையாய கடமையாக நினைக்காமல் இருக்கின்றனர். இதற்கு அரசுதான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் எந்த அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும்? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் அரசை ஆளும் அனைத்துக் கட்சிகளும் ஆசிரியர்களை தனது ஓட்டு வங்கியாக அல்லவா எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பள்ளி மாணவ/மாணவிகளுக்கு ஒரே "சீருடை"  என்ற விசயத்தை எப்போது கொண்டு வந்தார்கள் என்று எந்தக் கல்வியமைச்சர்களுக்காவது தெரியுமா? தெரியவில்லையெனினும், அதனை பள்ளிகளுக்கு கொண்டு வந்ததன் நோக்கம் நிச்சயம் தெரிந்திருக்கும். நமக்கும் கூட தெரியும்.


 
ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசத்தை மாணவ/மாணவிகளின் மனதில் விதைக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் கி.பி. 1961-ல் "சீருடை" என்ற திட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் இன்றைய தனியார் பள்ளிகளோ சீருடை கொண்டு வந்ததின் நோக்கத்தை மறந்து விட்டு , வெறும் வணிக நோக்கத்தை மட்டும் எண்ணிக் கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சீருடை என்றெல்லாம் ரூலை கொண்டு வந்து இம்சிக்கின்றனர். இதில் அமைச்சர்கள் "பினாமி" பெயரில் ஆரம்பித்த தனியார் பள்ளிகளும் அடக்கம்.


பள்ளிகளை ஆரம்பிக்கும் அனைத்து நிறுவனர்களுக்கும், தனது பள்ளி நம்பர் ஒன் வரவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கிறது. அதற்காக, ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து வைத்த "குமாஸ்தாவை உருவாக்கும் கல்வி முறையை" இன்னமும் பின்பற்றி அதில் சிறந்த குமாஸ்தாவை உருவாக்க  பல்வேறு விதமான கடுமையான விசயங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களும் வேறு வழியின்றி தனது பணியைச் செய்கின்றனர்.
இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. மாணவ/மாணவிகளை "எதிர்கால தூண்கள்" என்று வெறுமனே சொல்லுவதை விட்டு விட்டு பல்வேறு திறமைகளையும், தன்னம்பிக்கையையும் , ஆளுமைத்திறமையையும்  கொண்ட எதிர்காலத் தூண்களாக மாற்றும் வகையில் தனது நிர்வாகத்தை சீர் படுத்தினால் நிச்சயம் மாற்றம் வரும். அனைத்துப் பள்ளி நிறுவனர்களும் சேர்ந்து நல்ல முடிவெடுத்து, நிர்வாகத்தில் அதனை நடைமுறைப் படுத்தினால் நிச்சயம் அவர்களது வணிக வளர்ச்சி பாதிக்காத வகையில் பள்ளியின் நலம் மேன்மை பெறும்.

3. பெற்றோர்களின் கவனமின்மை:

இன்றைய இயந்திர உலகில் , கழுத்தை இறுக்கும் விலை வாசி உயர்வு, பால் விலை உயர்வு, காய் கறி விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு,  பள்ளி/கல்லூரி கட்டண உயர்வு இப்படி ஒவ்வொரு விசயங்களிலும் உயர்வுகளைக் கண்டு, இவற்றையெல்லாம் சமாளித்து, தனது சமூக வாழ்க்கையிலும் உயரங்களைக் கொண்டு வருவதற்காகத்தான் ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோர்களும் வேலைக்குச் செல்கின்றனர். ஆதலால்தான் தனது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட இயலாமல் போகிறது. 

தனது குழந்தை என்ன பேசுகிறது. என்ன கேட்கிறது. என்னென செய்கிறது.என்ன விரும்புகிறது. என்பதை எல்லாம்  ஒவ்வொரு பெற்றோர்களும் அறிந்து கொள்ள நினைத்தாலும்,  அதனை தினமும் கவனித்து, குழந்தையை வளர்த்த நேரமின்மையால் அவதியுறுகின்றனர். இப்படி அவதிப்படக் காரணமும் அவர்களேதான்.

காரணம், சென்ற பதிவில் நான் சொன்னது போல், கூட்டுக் குடும்பத்தை தவிர்த்து, தான் , தன் கணவன் , தன் குழந்தை என்று சிறு குடும்பமாகவும், தனிக்குடும்பமாகவும் வாழ ஆரம்பித்ததால்தான் இன்றைய ஆண்களும், பெண்களும் இப்படியெல்லாம் அல்லோலப்படுகின்றனர். ஒரு விதத்தில்  தனிக்குடும்பம் என்பது நிச்சயம் அவரவர் விருப்பம் தான். ஆனால் குழந்தையின் நலனையும் மனதில் நினைக்க வேண்டும். இந்தச் சமூக வாழ்க்கையில், ஈகோ என்ற விசயம்தான்  ஒவ்வொருவரையும்  தனிக்குடும்பத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. இதனை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.

ஒவ்வொரு பெற்றோர்களும் "தனது பிள்ளை கலெக்டர், விஞ்ஞானி, டாக்டர், எஞ்சினியர்,வக்கீல், பாடகன், பாடகி இப்படியெல்லாம் ஆக வேண்டும்" என்பதையெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவர்களின் திறமையைக் கண்டு, அந்தத் துறையில் அவர்கள் சாதனை செய்ய ஒரு வழிகாட்டியாக மட்டும் தான்  இருக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகள் தங்கள் கருத்துக்களை பெற்றோர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயம் ஒவ்வொரு பிள்ளைகளின் மன நிலையை பெற்றோர்களும்  ஆசிரியர்களூம் புரிந்து கொண்டு அவர்களை பக்குவப்படுத்தி வளர்த்த முடியும்.  ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும்  இருக்கும் பய உணர்வையும், தாழ்வு மனப்பான்மையயும் நிச்சயம் அழித்து விடலாம்.

மேலும் பொழுது போக்கு சார்ந்த விசயங்களை அளவோடு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. பெண்கள் யாரேனும் சீரியல்கள் பார்ப்பதை விரும்பினால், குழந்தைகளையும் உங்கள் விருப்பத்திற்குள் கொண்டு வராதீர்கள். சீரியல்கள் பார்ப்பதால் உங்களுக்கு நேர விரயம்தான். அதில் பெரும்பாலும்  குழந்தைகள் கற்றுக் கொள்ளும் நல்ல விசயங்கள் காட்டப்படுவதில்லை.

பிள்ளைகளுக்கு சிறந்த நண்பர்களாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தாலே நிச்சயம் அந்தப் பிள்ளைகள் சிறந்த பெற்றோர்களாகப் எண்ணுவர்.


இனி, பிள்ளைகள் செய்யக்கூடாத சில விசயங்களைச் சொல்கிறேன்.

தனது பெற்றோர் படிக்காதவர்கள் என்பதற்காகத் "தான்" எல்லாம் தெரிந்தவன் போலக் கருதக்கூடாது.

தன்னால் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேச முடியும். தனது பெற்றோர்களால் முடியாது என்றெல்லாம் நினைத்து தலைக்கனம் கொள்ளக் கூடாது.

பெற்றோர்களை முட்டாள்களாகப் பார்க்கக் கூடாது.

"தான்" எடுக்கும் முடிவுதான் சரி என்ற மனப்பான்மையையும் ஆதரிக்ககூடாது. ஏனெனில் ஒவ்வொரு நேரத்திலும் நாம் எடுக்கும் முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று சரியாகத் தெரிந்த ஒன்று இன்னொரு நாளில் தவறாகத் தெரியும். எனவே "முடிவு" எடுக்கும் விசயத்தில், வாழ்க்கையில் பல விசயங்களில் பக்குவப்பட்ட பெற்றோர்களைக் கேட்டு விவாதிப்பது மிக்க நலம்.


இங்கு நான் சொன்ன விசயங்களை நாம் செய்ய முயற்சித்தால் நிச்சயம் நமது குழந்தைகள் தன்னம்பிக்கையும், ஆளுமைத்திறமையும் கொண்ட
அறிவாளியாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வருவர்.

(பதிவு முடிந்தது).
############################################################






Wednesday, February 22, 2012

மாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்


ந்தப் பதிவு நான் எழுதக் காரணம், என்னை யோசிக்க வைத்த, சமீபத்தில் நடந்த மூன்று விசயங்கள். அவைகள்;

1. பிப்ரவர் -9 ந்தேதி அன்று சென்னை எக்மோரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை, 9ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்.

2. நான் படித்த உடுமலைப்பேட்டை ஏ.நாகூர், ஆர்.கே.ஆர் பள்ளியில் ,பிப்ரவரி -15 அன்று அனுஜ் என்ற 11ம் வகுப்பு மாணவனை எக்கனாமிக்ஸ் ஆசிரியர் "மஹேஸ்வரன்" பயங்கரமாக அடித்து உடலாலும் மனதாலும் துன்புறுத்தியதால், ஹாஸ்டலில் நைலான் கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.



3. அதே பள்ளியில் அதற்கு முந்தைய மாதம் கிரிஷ்ணகுமார் என்ற 10ம் வகுப்பு மாணவனும் இறந்த சம்பவம்.


இனி கட்டுரைக்கு செல்லலாமா!

இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்கள் நிகழ்வதற்கு, எனது பார்வையில்  மூன்று காரணங்களை முன் வைக்கிறேன்.

ஒன்று நமது கல்வி முறை, இரண்டு பள்ளிகளின் வணிக நோக்கத்தை ஒட்டிய நிர்வாகம், மூன்று பெற்றோர்களின் கவனமின்மை.

இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. பள்ளிக்கல்வி முறை:

மது பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடைய இளமை காலங்களில் எல்லாம் குருகுலம் என்ற பெயரில் தான் கல்வி கற்பிக்கப் பட்டது. அந்தக் காலக் கட்டங்களில் ஆசிரியர்களின் மீதான மரியாதையும் பயமும் மாணவ/மாணவியர்-களுக்கு நிறைய இருந்தது. அதற்கப்புறம் காலத்தின் மாற்றத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம் வந்தாலும் சமூகத்தில் ஆசிரியர்கள் மீதான மரியாதையும், பயமும் சில வருடங்கள் வரை அப்படியேதான் இருந்தது. இப்போது மரியாதை குறைந்து விட்டது. பயமும் குறைந்து விட்டது.

பொதுவாகவே, மாணவ/மாணவியர்-கள் ஆசிரியர்களைக் கண்டு பயப்படக் காரணம் ஒழுங்கின்மைக்கும், ஒழுங்காக படிக்காததற்கும் தரப்படும் தண்டனைகள்தான். ஒரு சில பள்ளிகளில் பிரம்பைக் கொண்டு சுமாராக அடிப்பது அல்லது கன்னத்தில் அறைவது என்ற வகையில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் நார்மலாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் இப்படித்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில பள்ளிகளில்(முக்கியமாக தனியார் பள்ளிகள்)  தண்டனைகள் பயங்கரமாக இருக்கும். கிட்டத்தட்ட போலிஸ் ஸ்டைல் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ரூமிற்குள் மாணவர்களை அடைத்து வைத்து, காட்டு மிராண்டித்தனமாக அடிப்பது. பெயில் ஆக்கிவிடுவேன். டி.ஸி கொடுத்து விடுவேன் என்று பயமுறுத்துவது போன்ற வகையில்தான்  மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

(நான் படித்த உடுமலைப்பேட்டை ஏ.நாகூர், ஆர்.கே.ஆர் பள்ளியில் போலிஸ் ஸ்டைலில் தான் மாணவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். அடிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல். மேலும்  கோவை, திருப்பூர், பொள்ளாச்சி முழுக்க அடிப்பதற்கு பேர் பெற்ற பள்ளி இதுதான். பரிட்சையில் பெயிலானால் சுமார் 20 நிமிடங்கள் அடி கிடைக்கும். தவறு செய்தால் போலிஸ் ஸ்டைல்தான். அப்போதெல்லாம் எங்கள் வகுப்பில் உள்ள அனைவரின் பேக்கிலும் புத்தகங்கள் இருக்கிறதோ இல்லையோ..நிச்சயம் "அயோடக்ஸ்" பாட்டில் இருக்கும். அடி வாங்க பயப்பட்டே, நான் பள்ளிப்பருவத்தில் தவறுகள் செய்யவில்லை. மேலும் ஆசிரியர்களிடத்தில் கொஞ்சம் நல்ல பேரையும் வாங்கியிருந்தேன்.அதனால் தப்பித்தேன்).

அதிக மெச்சூரிட்டி இல்லாத மாணவ பருவத்தில் , மாணவ/மாணவியர்-கள் பயங்கரமான அடிக்கப்படுவதாலும், பயமுறுத்தப்படுவதாலும்தான் , தற்கொலை, கொலை போன்ற விசயங்கள் அவர்களிடத்தில் நடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் அரசு, ஆசிரியர்கள் இனி மாணவர்களை அடிக்கக் கூடாது என்று 2006ம் ஆண்டு முதல் சட்டத்தை இயற்றியது. இது சம்பந்தமாக விசாரிக்க National Commission for the Protection of Child Rights (NCPCR) என்ற அமைப்பையும் கூட உருவாக்கியது. அது "கார்ப்பரல் பனிஷ்மெண்ட்"(Corporal Punishment) என்ற பெயரில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை வரைமுறைப்படுத்தி எல்லா பள்ளிகளுக்கும் உத்தரவு அளித்தது. ஆனால் என்னதான் அமைப்பை உருவாக்கி, நெறிப்படுத்தினாலும், பழைய பாணியில் மாணவர்களுக்கு தண்டனைகளைத் தரும் தனியார் பள்ளிகள் இன்னமும் உள்ளன. அரசும் இதனைக் கண்டுகொள்வது இல்லை. நான் படித்த அந்தப் பள்ளியில் இன்னமும் அப்படித்தான் நடக்கிறது. அதனால்தான் மேற்சொன்ன தற்கொலை சம்பவம் நடந்திருக்கிறது.

அரசு பள்ளிகளில் தரப்படும் தண்டனைகள் நார்மலாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அதற்கும் காரணம் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள்
ஒரு சிலர், மாணவர்களின் நன்னடத்தை, படிப்பு போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி தன் கடமையைச் செய்தாலும்,  நிறைய பேர், வெறுமனேதான் தன் பணியைச் செய்கின்றனர். மாணவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு 30 ந்தேதி சம்பளம் வந்து விடும். அவ்வப்போது அரசியல்வாதிகளின் சூட்சும தந்திரத்தால் இன்கிரிமெண்டும்(Increment) கிடைத்து விடும். இந்த எண்ணத்தில் அவர்கள் வேலை செய்வதால்தான் அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.

ஆனால் தனியார் பள்ளிகளின் நிலைமை வேறு. இன்றைய நடைமுறை வாழ்க்கையில், தனியார் பள்ளி நிறுவனர்கள் எவரும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் எண்ணத்துடன் பள்ளிகளை ஆரம்பிப்பதில்லை. இன்கம்டாக்ஸ் -லிருந்து தப்பிப்பதற்காகவும், வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும்தான் பள்ளிகளை கட்டுகின்றனர். மேலும் 100% தேர்ச்சி கொடுத்து, டாப் ராங்கில் தனது பள்ளி வந்தால்தான் என்ரோல்மெண்ட்(Enrollment) அதிகரிக்கும். பள்ளிக் கட்டணத்தை அதிகரித்து, பண வளத்தை பெருக்கலாம் என்ற எண்ணம்தான் அவர்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது. இப்படி வணிக நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாகம் வணிக நோக்கத்தில்தான் செயல்படுகிறது. அதனால்தான் அப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிறைய வகையில் பிரஷர் கொடுக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமானது "எடுக்கும் பாடங்களில் 100% தேர்ச்சி காட்டினால்தான் ஆசிரியருக்கு பணி நிரந்தரம் அல்லது இன்கிரிமெண்டும்(Increment)". இந்த வழிமுறைதான் இன்னமும் நிறைய தனியார் பள்ளிகளில் நடக்கிறது.

இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்தினால், இந்த மாதிரி நிர்வாகம் கொடுக்கும் பிரஷர்களை , ஆசிரியர்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு, அதற்காக உழைக்கின்றனர். ஆனால் அவர்களால் அத்தனை மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க முடியுமா? இது கொஞ்சம், முடியாத விசயம்தான். காரணமும் நமக்கு  தெரிந்ததுதான். ஒவ்வொரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் அறிவுப்புலமை, புரிந்து கொள்ளும் தன்மை, ஞாபக சக்தி அனைத்தும் நிச்சயம் வேறுபட்டு இருக்கும். ஆரம்பத்திலிருந்தே சரியான அரவணைப்பு, கவனிப்பு இல்லாத மாணவர்கள்/மாணவிகளுக்கு தேர்வில் தேர்ச்சி பெறுவது கொஞ்சம் கடினமான வேலைதான். அதற்கு ஆசிரியர்களை கடிந்து கொள்வது என்ன நியாயம்? இந்த சமயத்தில்தான் பெற்றோர்களின் அரவணைப்பும் ,கவனிப்பும் மாணவ/மாணவிகளுக்கு தேவைப்படுகிறது.

கூட்டுக் குடும்பமாக இருந்த வரை, பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றாலும் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் குழந்தைக்கு பாடம் எடுப்பர். கவனித்துக் கொள்வர். ஆனால் தனிக்குடித்தனம் தான் நல்லது என்ற சுயநல எண்ணம் இன்றைய பெண்களுக்கும் , ஆண்களுக்கும் இருக்கின்ற காரணத்தால்,  தனிக்குடித்தனத்தில் இருந்து கொண்டு, வேலைக்குச் செல்வதால் குழந்தைகளைக் கவனித்து, அரவணைக்க நேரமில்லாமல் அவதிப்படுகின்றனர்.

இப்படியிருக்கையில் குழந்தைகளின் அறிவுக் கூர்மை, புரிந்து கொள்ளும் தன்மை, ஞாபக சக்தி போன்றவற்றை கவனித்து, அவர்களை மேம்படுத்துவம் பணியை  முதலில் பெற்றோர்கள் செய்ய வேண்டும். அதற்கப்புறம்தான் ஆசிரியர்களின் பங்கு வருகிறது.

மேலும் இன்றைய சூழலில் ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ பாடங்கள் புரியாவிட்டாலும் கூட அதனை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுதி அதிக மார்க் வாங்கும் நடைமுறையைத்தான் ஒவ்வொரு பள்ளியும் செய்கிறது. ஒரு மாணவனால் அது முடியாத பட்சத்தில்தான் இது போன்ற தண்டனைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அறிவில்லாதவர்களாகவும், முட்டாளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த மாணவனிடத்தில் தாழ்வு மனப்பான்மையை பள்ளி பருவத்திலேயே விதைத்து விடுகின்றனர், அதனால் பாதிக்கப்படும் மாணவன் அல்லது மாணவி கடைசி வரை அதே தாழ்வு மனப்பான்மையுடனே வளர்ந்து ஆளாகி, திறமையற்றவர்களாக நினைக்கப்படுகின்றனர். எவ்வளவு பெரிய கொடுமை இது. இதுதான் இன்றைய கல்வி முறை செய்கிறது. அதனால்தான் தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்ட ஒரு மாணவன்  கொலை செய்யும் அளவுக்கு மாறி விடுகிறான்.


ஒரு பாடத்தை, மனப்பாடம் செய்து அதிக மார்க் வாங்குபவன் பெரிய அறிவாளி என்றும், அதை செய்ய முடியாத ஒருவன் முட்டாள் என்றும் கூறும் வழக்கத்தை பள்ளியும், சமுதாயமும் நிச்சயம் மாற்றிக் கொள்ளவேண்டும். இதைத்தான் சமீபத்தில் வெளி வந்த "தோனி" படம் ஆணித்தரமாக வலியுறுத்தியது. நல்ல கருத்தைச் சொன்ன இந்தப் படம் வியாபார ரீதியில் வெற்றி பெறவில்லை. ஏதோ ஒரு சில படங்கள்தான் சமூதாயத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களைச் சொல்கிறது. அதனை நாம் ஊக்குவிக்காமல் , காதலையும் , காமத்தையும், ரெளத்திரத்தையும், வன்மத்தையும் தூண்டும் திரைப்படங்களை கூட்டத்தோடு போய்ப் பார்த்து சமுதாயத்திற்கு "ரொம்ப்ப்ப" நல்லது செய்வதுதான் வாடிக்கையாகவே உள்ளது.

என் மனதில் நினைப்பது இதுதான்.
ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் நிச்சயம் எதோ ஒரு விசயத்தில் அதிக ஆர்வமும், திறமையும் இருக்கும். அதனை தெரிந்து அதற்கேற்ப அவர்களை உருவாக்குவதுதான் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தலையாய பணி. வெறுமனே 100% தேர்ச்சி என்று சொல்லிக் கொண்டு மார் தட்டிக் கொள்வதை விட ஒவ்வொரு மாணவர்களிடத்திலும் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களுக்கேற்ற துறையில் தலை நிமிரச் செய்து, அதனை ஒவ்வொரு பள்ளியும் விளம்பர படுத்தினால் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் நடக்கும்.

எல்லாம் சரி..இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்? நிச்சயம் அரசுதான். அரசு செய்யாவிட்டாலும், தனியார் பள்ளிகள் சுயமாகவே செய்யலாம், நிச்சயம் அவர்களின் வணிகம் பாதிக்கப்படாது என்பது என் எண்ணம்.
(பதிவு நீ...ளமாக இருப்பதால் இதன் தொடர்ச்சியை நாளை வெளியிடுகிறேன்..)

##############################################################

Tuesday, February 21, 2012

தெரிஞ்சுக்கோங்க - மின்மினிப்பூச்சி : சில விசயங்கள்


மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.

 

மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? 


 
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை.

மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

 

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

###################################################################
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற:
விண்டோசில் போல்டர்களை இனி உங்கள் வசதிற்கேற்ப வித விதமான கலர்களில் மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு கீழே தரப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்து அதில் தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை செய்யவும்.

நான் எனது விண்டோஸ் போல்டர்களின் கலர்களை மாற்றி விட்டேன். பார்க்கவும் அழகாக இருக்கிறது.  நீங்களும் முயற்சி செய்து பாருங்க..

###################################################################

Monday, February 20, 2012

தெரிஞ்சுக்கோங்க - இந்தியாவும் வல்லரசு கனவும்.


மீபத்தில் ஃஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களில் அதிகமாக ஷேர் பண்ணிய விசயம் இதுதான். படித்து ஷாக்காகி விட்டேன்.

"பிசினஸ் செய்திருந்தால் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?" என்ற கேள்விதான் இதைப் படித்தபின் எனக்குள் முதலில் வந்தது. நீங்களும் படித்துப் பாருங்கள்.

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!


டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.


என்ன நண்பர்களே..படிக்கவே மலைப்பாக இருக்கிறதா?
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.  ஒரு மாநிலத்தில் இருக்கும் அரசியல்வாதியே இவ்வளவு சம்பாதிக்கும் போது, பிற மாநிலத்து அரசியல்வாதிகள் எவ்வளவு சம்பாதித்திருப்பர்!.

இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விசயம். நிச்சயம் இனி இந்தியா எப்போதும்  வல்லரசாக முடியாது. அரசியல்வாதிகள் இன்னும் சம்பாதித்துக் கொண்டேதான் இருப்பர். ஏழை இன்னும் ஏழையாகிக் கொண்டேதான் இருப்பான்(விலை வாசி ஏற்றத்தினால்).கடைசிவரை ரேஷன் கடைதான் அவனுக்கு சூப்பர் மார்க்கெட்.

சினிமாவில் வரும் சூப்பர் ஹீரோ மாதிரி நிஜத்திலும் யாராவது வந்து நேர்மையாக அரசியல் செய்தால் மட்டுமே நம் நாடு உருப்படும். ஆனால் இந்த எண்ணமும் பகல் கனவு காண்பது போலத்தான்.

**************************************************************


Sunday, February 19, 2012

மற்றவை - காதலில் சொதப்புவது எப்படி:விமர்சனம்

                * காதலில் சொதப்புவது எப்படி *

 
ரு குறும்பட இயக்குனாராக வெற்றி பெற்ற பாலாஜி மோகன் முதன் முதலில் கொடுத்திருக்கும் படம் இது. தமிழ் , தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் ரிலிஸாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது?..தொடர்ந்து படியுங்கள்.


ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சித்தார்த்தும், அமலாபாலும் காதலிக்கிறார்கள். இடையில் இவர்களுக்குள் பிரேக் அப் ஆகி விடுகிறது. அது ஏன் என்று சித்தார்த் நம்மிடம் புலம்பித் தள்ளுகிறார். கடைசியில் திரும்பவும் சேர்ந்தார்களா? சேர்ந்தார்கள்(இதுதான் படத்தின் கரு). எப்படி சேர்ந்தார்கள் என்பதை வெள்ளித்திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


சித்தார்த் நடிப்பு:

யப்பா! என்ன ஒரு க்யூட்டான நடிப்பு. பாய்ஸில் பார்த்த அதே அப்பாவித்தன முகபாவம்,அசல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியே இருக்கிறார். என்ன நடிப்பு!. பாராட்ட நினைத்தால் படம் முழுவதும் இவரின் நடிப்பைப் பாராட்டலாம். அமலாபாலிடம் போன் நம்பர் கேட்பதற்காக இவர் செய்யும் முயற்சிகள், அப்புறம் அவ்வப்போது அமலாபாலிடம் போடும் குட்டி குட்டி சண்டைகள். அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. பிரமாதம் சித்தார்த்.


அமலாபாலின் நடிப்பு: 
 அமலாபால் என்றாலே அவரின் கண்கள் நிச்சயம் ஞாபகத்திற்கு வரும். படம் முழுவதும் க்யூட்டாகவும் ஹோம்லியாகவும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை மாடர்ன் டிரெஸ்ஸை விட சுடிதார், சேலை, தாவணி போன்ற உடைகளில் அமலாபால் ரொம்ப அழகாக இருக்கிறார். இந்தப்படத்தில் அவரின் ஹேர் ஸ்டைலும் வெரி நைஸ். படத்தில் இவரின் நடிப்பைப் பற்றி சொல்வதென்றால் ஒன்றே ஒன்று சொல்லலாம். படம் பார்க்கும் போது சித்தார்த்தும், அமலாபாலும் நிஜமான காதலர்கள் போலத்தான் தெரிகிறார்கள். நிஜமான காதலர்கள் சண்டை போடுவது போலத்தான் தெரிகிறது. அமலாபாலின் கண்கள் கூட நிறைய இடங்களில் நடித்திருக்கிறது. மொத்தத்தில் மைனா, தெய்வதிருமகளுக்குப் பிறகு இந்தப் படம் அமலாபாலுக்கு பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


இயக்குனரின் திறமை:

சென்னையில் உள்ள S.S.N Engg கல்லூரியில் என்ஜினியரிங் படித்து விட்டு, ரயில்வே துறையில் கிடைத்த வேலையையும் விட்டு விட்டு, சினிமாவின் மீதான ஈர்ப்பில் அத்துறைக்கு வந்து, குளிர்100, துரோகி போன்ற படங்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிக் கொண்டே, கலைஞர் டி.வியில் நாளைய இயக்குனரில் கலந்து , போட்டியில் மூன்றாவதாக வெற்றி பெற்று , இன்று ஒரு அழகான ரொமாண்டிக் காமெடி படத்தை தந்த இயக்குனர் பாலாஜி மோகனுக்கு ஹேட்ஸ் ஆஃப்.  இவர் கொடுத்த இந்த வெற்றியின் மூலம் குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இனி தமிழ் சினிமா உலகம் கதவு திறக்கும். அதற்காகவே மறுபடியும் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.


இன்றைய இளைய தலைமுறைகளின் காதல்களை யதார்த்தமாகவும், அதே நேரத்தில் ரசிக்கும் விதத்தில் காமெடி கலந்தும் ஒரு காக்டெயில் தந்திருக்கிறார். படம் பார்க்கும் போது நிச்சயம் புரியும். படத்தில் வரும் சித்தார்த், "அண்ணே" என்றழைத்த பெண்ணையும் காதலிப்பதாக சொல்லும் சித்தார்த் நண்பன், அப்புறம் அந்தக் குண்டு நண்பன்(அடிக்கடி பெண்களிடன் அறை வாங்குவார்.ஆனால் எல்லா லவ்வர்ஸ்களுக்கும் ஐடியா கொடுப்பார்) அனைவரும் ரசிக்கவும் வைக்கின்றனர். சிரிக்கவும் வைக்கின்றனர்., சித்தார்த் அப்பா, அம்மா, அமலாபாலின் அப்பா,அம்மா அவர்களின் காதல் எபிஷோட் நன்றாக இருக்கிறது. அதிலும் ஒரு யூத்புல்னஸ் தெரிகிறது. படத்தில் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட் வசனங்கள்தான் வெரி சூப்பர்ப். எக்ஸெலண்ட் ஷ்கிரீன் ப்ளே..வெல்டன் பாலாஜி மோகன்.

இசை:
எஸ்.தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் படி இல்லை. இருப்பினும் பிண்ணனி இசையால் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார். வெல்டன் ஜாப்.


ஒளிப்பதிவு:
நீரவ்ஷாவின் இணைதயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் இது. படம் முழுவதும் அழகழகான ப்ரேம்களை கொடுத்திருக்கிறார். அமலாபாலை ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார். படம் முழுவதும் யூத்புல்னஸ் தெரிகிறது.

காதலில் சொதப்புவது எப்படி - A Wonderful romantic comedy film.Must watch it.

**********************************************************

மற்றவை - முப்பொழுதும் உன் கற்பனைகள்:விமர்சனம்


          * முப்பொழுதும் உன் கற்பனைகள் *
 
சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரியும் ஸ்மார்ட் இளைஞரான அதர்வாவை சுற்றி பெண்கள் கூட்டம். வலிய வந்து அதர்வா மீதான காதலை சொல்லும் ஒர் பெண்ணிடம் , தான் சாரு என்ற ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்கிறார். "மேலும் அவளிடம் பழகினால், பெண் என்பதையும் மறந்து நீயும் அவளை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்" என்று தன் காதலியைப் பற்றி  சொல்கிறார். வார விடுமுறை நாட்களை பெங்களூரில் இருக்கும் காதலியுடன் கழிக்கிறார். இந்நிலையில் அதர்வா பணிபுரியும் கம்பெனிக்கு புதிய சி.இ.ஓ ஆக அமெரிக்காவிலிருந்து அமலாபால் (இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் முடித்து விட்டு ) வருகிறார். அதர்வாவைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். ஏனெனில் அதர்வாவிடம் பழகிய பெண் அவர்தான். அப்படி இருக்கையில் பெங்களூரில் இருக்கும் அதர்வா காதலி யார்? என்ற குழப்பதுடன் இருக்கிறார். குழப்பத்துடன் அவர் காதலி குடியிருக்கும் பெங்களூர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு அதிர்ச்சியான விசயங்கள் தெரியவருகிறது.அது என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதர்வாவின் நடிப்பு:
பாணா காத்தாடியில் இருந்த அதர்வாவை விட இதில் ஆள் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சண்டைக் காட்சிகளில் நிறைய உழைத்திருக்கிறார். அடுத்து வரப்போகும் பாலாவின் படத்தில் இன்னும் நிறைய திறமையை எதிர்பார்க்கலாம்.

அமலாபாலின் நடிப்பு:
அதர்வாவின் கற்பனைக் காதலி சாருவாகவும், சாப்ட்வேர் கம்பெனி சி.இ.ஓ லதாவாகவும் இரு வேறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதர்வாவின் காதலியாக வரும் காட்சிகளில் அதர்வாவுக்கும் அமலாபாலுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. சி.இ.ஓ கேரக்டர் அவ்வளவாக ஒட்ட வில்லை.

இயக்குனரின் திறமை:
மேக்கிங்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆனால் அதர்வா கொலை செய்ய வரும் காட்சிகளில் ஏன் முகத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார்? வித்தியாசமான மேக்கிங்க் தருவதாக நினைத்துக் கொண்டு நிறைய குழப்பி இருக்கிறார். தொடர்ச்சியாக பாடல் காட்சிகள் வருவதை தவிர்த்திருக்கலாம். ப்ளாஸ்பேக் காட்சிகளில் வரும் அதர்வாவின் அம்மா நடிப்பும், காட்சியமைப்பும் நன்றாக உள்ளது.

இசை:
ஜி.வி.ப்ரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் ஓ.கே. மற்றபடி படத்திற்கு தேவையான பிண்ணனி இசையை கொடுத்திருக்கிறார். பாராட்டும்படி  இல்லை.

ஒளிப்பதிவு:
படத்தில் பாராட்டும்படி இருப்பது ஒளிப்பதிவுதான். நிறைய காட்சிகளில் அழகான ப்ரேம்களை ஒளிப்பதிவாளர் தந்திருக்கிறார்.

நாசர், ஜெயப்ரகாஷ்,அனுபமா குமார் போன்றோரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. சந்தானம் வரும் காட்சிகளில் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் சிரிக்க முடிகிறது.

முப்பொழுதும் உன் கற்பனைகள - ஆவரேஜ்


*****************************************************

Thursday, February 16, 2012

மற்றவை - குறும்படங்கள் பற்றின விமர்சனங்கள்

குறும்படம் 1:
நான் பார்த்த வரை, காதல் சம்பந்தப்பட்ட குறும்படங்கள் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் இங்கு எடுக்கின்றனர். காரணம் கற்பனை செய்து காட்சிகளை அமைப்பது மிக மிக எளிது. இருப்பினும் ஒரு சில குறும்பட இயக்குனர்கள் வித்தியாசமான கதை கொண்ட குறும்படங்களையும் எடுக்கின்றனர். அந்த வகையில் குறும்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள எனது அலுவலக நண்பன் "எழிலரசன்", முதன் முதலில் எடுத்த குறும்படம் இது.

படத்தின் கரு:

வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் மனநிலை, செல்வந்தர்களின் மனநிலையை விட எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் படம் இது.

இந்தப் படத்தில் நடித்துள்ள குப்பை பொறுக்கும் சிறுவன், நிஜத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறான். செல்வந்தர்கள் பெருமளவில் வசிக்கும் சென்னை-அடையாறின் தெருக்களில்தான் இந்தச் சிறுவன் தினமும் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறான். நான் கூட பல முறை பார்த்திருக்கிறேன்.

படத்தில் எனக்கு பிடித்த காட்சி:

தன் மகனிடம், ஒரு பிச்சைக்கார சிறுவன்  விளையாடிக் கொண்டிருப்பதை கூட பொறுக்காத ஒரு செல்வந்தரின் பேக்கை திருடர்கள் திருடிக் கொண்டு போக எத்தனிக்கையில், அவர்களின் பைக்கின் குறுக்கே வந்து நின்று கொண்டு தடுக்கும் இந்தச் சிறுவனை திருடர்கள் இடித்து தள்ளி விட்டு ஓடுகின்றனர். அப்போது,  திருடப்பட்ட பேக்கில் இருந்த பல ருபாய் நோட்டுக்கள் நடு ரோட்டில் சிதறிக் கிடக்கின்றன. அந்தச் சிறுவன் அதனை எடுத்து, அந்த செல்வந்தரிடம் காட்டி விட்டு  உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை மெளனமாக எடுத்துரைத்து விட்டு, அடிபட்ட காலுடன், தன் வழியே நடந்து போகின்றான்.

படத்தின் ப்ளஸ்:

* படத்தின் கருவும், க்ளைமாக்ஸ் காட்சியும், அதன் பிண்ணணியில் வரும்  
   இசையும்.

*வசனங்களை குறைவாக அமைத்து இசையின் மூலம் காட்சியை நகர்த்தியது.

இப்படி ஒரு கருவை எடுத்து , அதனை காட்சிப்படுத்திய நண்பன் எழிலரசனுக்கு எனது பாராட்டுக்கள்.

படத்தின் மைனஸ்:

அபார்மெண்ட் சிறுவர்களின் ஆரம்பகாட்சிகள் முழுமை பெறாமல் எடுத்திருப்பது நன்றாகவே தெருகிறது. அப்புறம் அபார்மெண்ட் சிறுவர்கள் பேசிக்கொள்வது செயற்கையாக தெரிகிறது. இருப்பினும் முதல் குறும்படம் என்ற காரணத்தினால் , இது போன்ற குறைகளை விட்டு விடலாம். அடுத்த படத்தில் இது போன்ற குறைகள் இல்லாமல் இருத்தல் நலம்.

Video:



 ==================================================
 குறும்படம் 2 : லவ் புக்

சனமே இல்லாமல் சுமார் 20 நிமிடங்களில் ஒரு சுவாரசியமான குறும்படத்தை யாரேனும் தர முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கின்ற 
வகையில் அமைந்திருக்கிறது "லவ் புக்" என்ற இந்த குறும்படம். சிறந்த குறும்படமாகவும் அவார்ட் வாங்கியிருக்கிறது. அவார்ட் வாங்குவதற்கேற்ற 
குறும்படம்தான். இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ் மியூசிக் தான். ஒரு சில காட்சிகள் சாதாரணமாக அமைந்திருந்தாலும் மியூசிக்+ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல அவுட்புட்டை கொடுத்திருக்கிறது.  
Video:



======================================================

 குறும்படம் 2 : கண்ணாமூச்சி                                                                                            

டி துறையில் பணிபுரிபவர்கள், கோவா படத்தைப் பார்த்து விட்டு அதே சாயலில்,  எடுத்த முதல் குறும்படம் இது. படத்தில் வரும் ஹீரோ ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது பாடி லாங்குவேஜ் ரசிக்கும்படி உள்ளது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. காதல்+காமெடி கலந்த படம் இது.  Hope you guys enjoy with it.

Video:




********************************************************

Wednesday, February 15, 2012

தெரிஞ்சுக்கோங்க - பிளாக் விருது பெற்ற பதிவர்கள்

ப்போதெல்லாம் பதிவுலகத்தில் பதிவு எழுதுபவர்கள் நிறைய பேர் ஏதோ ஒரு காரணத்தால் அடிக்கடி பதிவு எழுதுவதில்லை என்று கரிசனப்பட்டு, "டல்லடிக்கும் பதிவுலகம்" என்ற தலைப்பில் இந்திரா அவர்கள் எழுதியிருந்தார்கள். அதனை ஆதரித்து தோழி ரமாரவி தனது பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். நானும் அவர்கள் சொல்வது போல, சில நாட்கள் பதிவு எழுதுவதில்லை.என்ன செய்வது மென்பொருள் துறையில் இருப்பதால் சில சமயங்கள் இப்படி நேர்கிறது. 

சரி இன்றைய பதிவிற்கு வருவோம்.




னது பதிவுலக பெங்களூர் தோழியான, ரமாரவி அவர்கள் எனது "இக்கரையும் அக்கரையும்" வலைப்பூவிற்கு ஜெர்மனிய விருதான "லிப்ஸ்டர் பிளாக்" விருது கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.  ஈகோயிஷம் நிறைந்த இந்த உலகத்தில், இது போன்ற ஊக்குவிப்பு விசயங்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த ஊக்குவிப்பு விசயங்கள் தான் எழுதுபவர்களை இன்னும் நிறைய நல்ல நல்ல பதிவுகளை எழுத தூண்டும். தோழிக்கு மிக்க நன்றி.



மேலும் நான், இந்த "லிப்ஸ்டர் பிளாக்" விருதை  மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க சொல்லியிருக்கிறார். அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த 5 பதிவர்களுக்கு இந்த விருதுடன் "இன்ட்ரெஸ்டிங்க் ப்ளாக் அவார்ட்" என்ற ஒரு விருதை அளிக்கிறேன்.



1. "காற்றைவிட வேகமானது எண்ணம்." என்ற ஷார்ப்பான மேற்கோள் கொண்டு "மதுரகவி" என்ற வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதி வருகிறார் தோழி ரமாரவி . தனது பதிவுகளை சில வகைகளாக பிரித்து இவர் எழுதி வருகிறார். தெளிவான கருத்தோடு, ரசிக்கும்படியான எழுத்துக்களை வார்த்தைகளாக்கி படிப்பவர்களுக்கு தான் சொல்ல வந்ததை அழகான படங்களுடன், நயமாகவும் இவர் தனது கட்டுரைகளை எழுதுகிறார். இவர் எழுதும்  "கட்டுரைகள்" தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி.

2. "வாசிப்பது என்பது சுவாசிப்பது, வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்" என்ற தனது மன எண்ணத்தை மேற்கோளாக்கி "மணிராஜ்" என்ற வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார் இராஜராஜேஷ்வரி. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்கள் தான் இவரின் வலைப்பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் விசயங்கள், ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு  நிச்சயம் வீட்டில் பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளும் அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் இவர் பதிவில் வரும் ஒவ்வொரு கடவுளின் படங்களும் கொள்ளை அழகு. வித விதமான உருவங்களில் அத்துணை இந்து மத கடவுள்களின் படங்களூம் இவரின் வலைப்பூவில் இருக்கும்.  ஆன்மீக சம்பந்தமான வலைப்பூவில் என்னை மிகவும் கவர்ந்ததில் இதுவும் ஒன்று.

3. "வந்தேமாதரம்"  என்ற தலைப்பில் உள்ள சசிகுமார் என்பவரின் வலைப்பூவில், கம்ப்யூட்டர் பாதுகாப்பு, வித விதமான பயனுள்ள புதிய ஃசாப்ட்வேர்கள், மொபைல் ஃபோனுக்கு பயன்படும் பயனுள்ள அப்ளிகேஷன்கள் போன்ற விசயங்கள்தான் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு புதிய ஃசாப்ட்வேர் உங்களுக்கு தேவைப்பட்டால் இவரது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். நிச்சயம் ஃபிரியாக கிடைக்கும்(எளிமையான தமிழ் விளக்கங்களோடு).

4. மூத்தவரானா திரு.ரமணி அவர்கள் "தீதும் நன்றும் பிறர் தர வரா" என்ற தலைப்பில் தனது  வலைப்பூவில் எழுதி வருகிறார். இவருடைய வாழ்வியல் அனுபவக் கட்டுரைகள் ஒரு திரைப்படம் போல் படிப்பவர்களின் கண்முன் காட்சியளிக்கிறது. சமீபத்தில் கூட இவர் எழுதிய "உறவுகள்' என்ற கட்டுரை, மனதை நெகிழ வைத்து விட்டது. நிறைய யோசிக்கவும் வைத்தது. அவருக்கு இந்த விருதை பகிர்வதன் மூலம் எனது பாராட்டுக்களை சமர்பிக்கிறேன்.

5. "தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்." என்ற வாக்கியத்தை கொண்டு நமக்கு தன்னம்பிக்கையையும் தரும் விசயங்களை ஒவ்வொரு பதிவிலும் அலசும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. நகைச்சுவை உணர்வு கலந்த வரிகளைக் கொண்டுதான் இவர் தன் பதிவை எழுதுவார். அதுதான் அவரது சிறப்பு கூட. பாராட்டுக்கள் நண்பரே!

****************************************************************

Thursday, February 02, 2012

தெரிஞ்சுக்கோங்க - சில விசயங்கள்



எலும்பு முறிவை ஏற்படுத்தும் வயிற்றுப்புண் மருந்து:

யிற்றுப்புண் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு பி.பி.ஐ. என்ற ஒருவகை மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மசாசிஸ்ட் மருத்துவ ஆய்வுக்குழு கூறியுள்ளது.


இந்த மருந்துகளை சாப்பிடும்போது மெல்ல, மெல்ல எலும்புகளை பலவீனப்படுத்துவதாகவும், அதன் மூலம் 45 வயதிற்கு மேல் எலும்பு முறிவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் பெண்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் கடும் பாதிப்பை சந்திப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் பலவீனமாகி விடுவார்கள். அப்போது இந்த மருந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி இடுப்பு எலும்புகளை சேதப்படுத்துவதாகவும் அதன் மூலம் முறிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

*****************************************************

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?:

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள்.


எனவே குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.

அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

**********************************************************
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

மது முந்தைய தலைமுறைகள் கடைபிடித்து வந்த உணவு உண்ணும் முறையை, தற்போது கடைபிடிக்கப்படுகிறதா? என்று பார்த்தால் இல்லைதான்
என்று சொல்ல முடிகிறது. இருப்பினும் முந்தைய தலைமுறைகள் உணவு உண்ணும் முறையை சொல்லியிருக்கின்றனர். அந்த உண்மைகள் இவைதான்.


அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.


மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.ஹ

கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

******************************************************

Wednesday, February 01, 2012

மற்றவை - அரசியலில் புதிதாக கிளம்பிய புயல்

நேற்றைய சட்டசபையில் அ.தி.மு.க விற்கும், தே.மு.தி.க விற்கும் நடந்த விவாதங்கள், அதனைத் தொடர்ந்த தே.மு.தி.க வின் வெளிநடப்பு செயல்கள் அனைத்தும் நிறைய விசயங்களை தமிழக அரசியல் வட்டாரத்திற்கு உணர்த்தி விட்டது. அதற்கு முன் சில முன்னோட்ட விசயங்களைப் பார்ப்போம்.

தே.மு.தி.க , அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது முதல் விஜயகாந்த் ஒரு போதும் அம்மாவின் பெயரை தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை.


அம்மாவும் அப்படியே.  "எம்.ஜி.ஆர் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். அதுவும் தி.மு.கவை ஜெயிக்க வைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்", என்றெல்லாம் விஜயகாந்த் சொல்லி வந்தார். மேலும் எந்த ஒரு பிரசார மேடையிலும் இருவரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்யவில்லை.  பா.ம.க., ம.தி.மு.க வைப் போல தன் கட்சியையும் அம்மா கிள்ளுக்கீரையாக நினைத்து விடக்கூடாது. அதனால் தன் கட்சியின் அந்தஸ்து பாதித்து எதிர்கால அரசியலுக்கு ஆப்பு வைத்தது போலாகி விடும் என்றெல்லாம் விஜயகாந்த் தரப்பில் ஒரு கருத்து இருந்தது. அதை நினைத்துதான் விஜயகாந்த் ஆரம்பித்திலிருந்தே தன் கட்சியின் செல்வாக்கை தளர்த்தாமல் பார்த்துக் கொண்டார். தன்னுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகளெல்லாம் தன் கீழ் வந்து, தனது பேச்சைத்தான் கேட்டாக வேண்டும் என்ற நியதியிலிருந்து தே.மு.தி.க விலகி இருந்த காரணத்தால் , நேற்றைய சட்டசபையில் அதற்கான விளைவுகள் விவாதமாகி வெட்டவெளிச்சமாகிவிட்டது. அ.தி.மு.க பெரும்பான்மையோடு ஜெயித்தபோது ,  அம்மாவும், விஜயகாந்தும் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஆளுங்கட்சி செய்யும் ஒவ்வோர் விசயங்களுக்கும் , அதனை கவனித்து சட்டசபையில் விவாதிப்பதுதான் எதிர்கட்சியின் பணி. அந்த வகையில் முதன்முதலில் எதிர்கட்சி அங்கிகாரம் பெற்ற தே.மு.தி.கவின் செயல் ஏமாற்றத்தைதான் அளித்தது. இத்தனை நாள் எங்கு போய் விட்டீர்கள் என்ற வகையில்தான் தே.மு.தி.க இருந்தது.




ஆனால் நேற்றைய சட்டசபை விவாதம்,(எங்களுடன் கூட்டணி வைத்ததால்தான் தே.மு.கவிற்கு இவ்வளவு வெற்றிகளும், எதிர்கட்சி அந்தஸ்த்தும் கிடைத்தது என்று அ.தி.மு.க தரப்பு சொல்ல, அம்மா சவாலே விட்டு விட்டார். அதற்கேற்ற பதிலை விஜயகாந்த் நயமாக சட்ட சபையில் எடுத்துரைத்தார். விஜய்காந்த்தின் பேச்சு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அம்மா அவர்களின் அகந்தை இன்னும் மாறவில்லையே? என்ற கேள்வியும் எழுந்தது.)  ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் உள்ள பல நாள் பகையை உணர்த்தி விட்டது. இனி மேல் என்ன நடக்கும் என்பதை யூகித்து சொல்கிறேன். இது எனது மனதில் தோன்றிய எண்ணங்கள்தான்.

தே.மு.தி.க கட்சியினர் நிறைய பேர் , இனி அ.தி.மு.க விற்க்கு தாவலாம்.

தி.மு.க கட்சியினர் மீதான நில அபகரிப்பு கைது போன்ற நிகழ்வுகள், இனி தே.மு.தி.க வினருக்கும் நடக்கலாம். அதனையெல்லாம் தே.மு.தி.க கட்சியினர் கண்டு பயப்படாமல் இருப்பார்களா என்பது கொஞ்சம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க விற்கு கட்சிதாவல்களை அவர்கள் மேற்கொள்ளலாம்.

இனி, ஆழுங்கட்சியின் ஒவ்வோர் நடவடிக்கையையும் , எதிர்கட்சி கண்காணித்து விவாதத்தை ஆரம்பிக்கலாம். நிறைய அறிக்கைகள் இனி தே.மு.தி.க தரப்பில்
பத்திரிக்கைகளில் வெளிவரலாம். தன் பணியை விஜயகாந்த் சரியாக செய்தால் நிச்சயம் இனி அவரது கட்சிக்கு செல்வாக்கு பெருக ஆரம்பிக்கும்.

அம்மாவின் அதகளத்தைக் கண்டு அ.தி.மு.க வினரே ஆடிப் போகின்றனர். எத்தனை முறை பதவி பறிப்பு, பதவி ஏற்பு நடந்து விட்டது. அப்படிப்பட்ட மலை போல இருக்கும் ஆளுங்கட்சியின் தலைமையை, எதிர்கட்சி எப்படி சமாளிக்கும் என்பதை இனி மேல் நாம் பார்க்கலாம்.

 இன்றைய தினமலரில் எதற்கு கொடுத்தோம் இலஞ்சம் என்ற பகுதியில் ஒரு கட்டுரை வந்துள்ளது. இது போல் மக்கள் அனைவரும் இலஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்பட்ட விவரங்களை கட்டுரையாக அனுப்பினால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும். மறக்காமல் அந்தப் பகுதியைப் படித்துப் பாருங்கள்.



***********************************************************