Wednesday, October 23, 2013

என்னைக் கவர்ந்த ஜப்பானிய மக்கள்


சென்னையில் இருக்கும் போது தினமும் பதிவு எழுதி வந்தேன். ஜப்பானுக்கு வந்த பின்பு பதிவு எழுதுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தும், ஏனோ பதிவு எழுத இயலவில்லை. சரி மனதிற்கு தோணும் போது எழுதலாமே என்று மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தேன். இன்றுதான் எழுத மனம் நினைத்தது.

சரி விசயத்திற்கு வருவோம்.

ஜப்பானுக்கு வந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. இத்தனை நாட்களில், ஜப்பானில் ஆச்சர்யமான நிறைய அனுபவங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறேன் .  ஜப்பான் நாட்டைப் பற்றி,  ஜப்பானிய மக்களைப் பற்றின நிறைய விசயங்கள் என்னை மிகவும் அதிசயபட வைத்து விட்டன. இனி அவ்வப்போது, இங்கு நான் பெற்ற நேரடி அனுபவங்களை, ஒவ்வொன்றாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



உண்மையிலேயே நம் இந்திய மக்கள் , குணத்திலும், பழக்க வழக்கத்திலும் மேன்மையானவர்களா? என்ற கேள்விக்கு தற்சமயம் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் நிறைய விசயங்களில் மேன்மையாக இருக்கும் ஜப்பானிய மக்களிடம் நான் பெற்ற அனுபவங்கள்தான். கீழே ஒரு சில விசயங்களை சொல்லியிருக்கிறேன். அதனைப் படித்த பின், "நாம் எப்படி?" என்ற உண்மையை அறிய முடியும்.




ஜப்பானிய மக்களிடம் என்னைக் கவர்ந்த விசயங்கள்:

*நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.
பர்சனலாகவே பொய் பேசுவதை வெறுப்பது.

*அடுத்தவரின் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது.
 
*பொது இடங்களில், தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பது.
 
*ரயில் பயணங்களில் செல்போன் பேசாமல் இருப்பது. முக்கியமாக சத்தம் போட்டு பேசாமல் இருப்பது. முடிந்த வரை பேசாமல் இருப்பது.
 
*தன் தாய்மொழியை அதிகமாக நேசிப்பது.
 
*ரயிலில் ஏறும்போதும் அல்லது பஸ்களில் ஏறும் போதும்(கூட்டமாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும்) யாருடைய உத்தரவின்றியும் தானாகவே க்யூவில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒன்றன் பின் ஒன்றாக ஏறுவது.
 
*அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு வருவது.
 

*வேலை நேரத்தில் செல்ஃபோன் பேசாமல் இருப்பது.
 
*12 மணி நேரம் வேலை செய்தாலும் சலிக்காமல் வேலை செய்வது. வேலை நேரத்தில் ஓ.பி அடிக்காமல் இருப்பது.
 
*எல்லா விசயங்களிலும் சிஸ்டமேட்டிக்காக இருப்பது.
 
*விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்கு நன்கு பயன்படுத்துவது.
 
*அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.

* சுற்றுப் புறத்தை மிகச் சுத்தமாக பேணிக் காப்பது,(உதாரணத்திற்கு குப்பைகளை எல்லாம் மட்கும்/மட்காத குப்பைகளாக பிரித்து கார்ப்பேஜில் போடுவது.ரோட்டில் எச்சில் துப்பாமல் இருப்பது,ரோட்டில் எவ்வித அசுத்தமும் செய்யாமல் இருப்பது, ரோட்டில் புகை பிடிக்காமல் இருப்பது, எஸ்கலேட்டர், அலுவலக படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று கொண்டு, அவசரமாக செல்போருக்கு எப்போதும் வழி விட்டு செல்வது. மொழி தெரியாத நபர்கள் கேட்கும் விசயத்தை சலிக்காமல் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது. உதாரணம். ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடுவது) 


 
*எவ்வளவு சரக்கடித்தாலும் கரெக்டாக ரயிலேறி வீட்டிற்கு போவது.


உதாரணத்திற்கு எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம்:

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பார்க்கிற்கு நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம். என்னுடைய கேமாராவையும் நான் எடுத்து சென்றிருந்தேன்.

அன்று ஒரு ஜப்பானிய பண்டிகை நாளாக இருந்ததால், அங்கு நிறைய கூட்டம் இருந்தது. ஒரு சில இடங்களுக்கு சென்று விட்டு, வேரொறு இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் போதுதான் எனக்கு, இடுப்பில் கட்டி வைத்திருந்த என் கேமரா கழன்று எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தேன்.

ஆசைப்பட்டு சுமார் 250000.00 ரூபாய் மதிப்பில் வாங்கின கேமரா, காணாமல் போய் விட்டதே? என்று புலம்பிக் கொண்டு எல்லா பக்கமும் தேடிப்பார்த்தோம்.கிடைக்கவேயில்லை. சரி அதற்கு ஆயுள் அவ்வளவுதான் என்று நினைத்து விட்டு, மனதைத் தேற்றிக் கொண்டு வீட்டிற்கு செல்ல நினைத்த போது, எனது நண்பர் ஜப்பானில் எந்த பொருள் காணாமல் போனாலும் அது திரும்ப கிடைத்து விடும். மக்களின் குணம் அப்படி என்று சொன்ன போது சரி ட்ரை பண்ணலாம் என்று பக்கத்தில் இருக்கும் போலிஸ் ஸ்டேசன் சென்று ஒரு கம்ப்ளெயிண்ட் செய்தோம். அந்தப் போலிஸ்காரர் சில நிமிடங்கள் எங்களை வெயிட் பண்ணச் சொல்லி விட்டு, யாருக்கோ ஃபோன் செய்து பேசினார்.

சில நிமிடத்தில், ஒரு வேறொரு போலிஸ் ஸ்டேசன் இடத்தைச் சொல்லி, அங்கு சில கேமராக்கள் சில மணி நேரம் முன்பு கிடைத்திருப்பதாகச் சொல்லி, அங்கு போகச் சொன்னார். முகவரி தெரியாததால், எங்களுக்கு அந்த இடத்தின் முகவரி மற்றும் செல்லும் வழிமுறையும் சொல்லி, ஒரு டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார். அவர் சொன்ன இடத்திற்கு சென்று , தொலைத்த எனது கேமராவை திரும்ப பெற்றுக் கொண்டேன்.  நாங்கள் சென்ற பார்க் பக்கத்தில் இருக்கும் ஒரு அரசு பாதுகாப்பு அலுவலகத்தில், எனது கேமராவை ஒரு ஜப்பானிய நபர் கண்டு எடுத்து கொடுத்ததாக அந்த ஸ்டேசன் போலிஸ் அதிகாரிகள் சொன்னார்கள். அன்றுதான் நமது ஊரையும், ஜப்பானையும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.




நமது மக்களும் இவர்களைப் போல் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?. என்றுதான் மாறும் இந்த நிலை நம் நாட்டில்? இந்தக் கேள்விதான் எனக்குத் தோன்றியது அப்போது.

இன்றைய பதிவு அவ்வளவுதான்.மீண்டும் ஒரு சிறப்பான அனுபவத்தை எழுதுகிறேன்.

#################################################################









Sunday, March 31, 2013

எனது படைப்புகள் : தமிழ் ஈழ மக்களுக்காக ஜப்பானில் உண்ணாவிரதப் போராட்டம்


2009,மே 18 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை நான் அறிந்த போது, இத்தனை வருடங்களாக தமிழ் ஈழ மக்களின் நலனுக்காக போராடிய தலைவன் இறந்தவிட்டார். இனி மேல் அம்மக்களின் கதி என்ன? என்பதனை நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்போதே சிங்கள இராணுவத்தினர் தமிழ் ஈழ விடுதலை போர் வீரர்களையும், வீராங்கணைகளையும் , அப்பாவி மக்களையும் துன்புறுத்தி கொலை செய்யும் படங்களையும் வீடியோக்களை இணையத்தில் நான் பார்த்திருந்தேன். மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி கொடூர மனதுடன் சிங்கள இராணுவத்தினர் செய்கின்றனர்?  மனித உயிரை எடுப்பது அவ்வளவு சுலபமா அவர்களுக்கு?
    
                             

தலைவனில்லா ஈழ மக்களின் நிலைமை இனி என்னவாகப் போகிறது? என்றெல்லாம் நினைத்தபோது, ஐ.நா சபையினர் இலங்கை அரசின் மீது போர் குற்றம் சாட்டி ஏராளமான தகவல்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாகவும், இணையங்கள் வாயிலாகவும் காட்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த வருடம் வரை சிங்கள அரசின் மீது எவ்வித நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. மேலும் நம் தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் சிங்கள அரசின் செய்ல்பாடுகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தாலும், தமிழக மக்களின் மனதில் தமிழ் ஈழ மக்களைப் பற்றியும், ஈழ மக்கள் படும் துயரங்கள் பற்றியும் எவ்வித புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறது.
2013, மார்ச் 11 அன்று 8 மாணவர்கள் சேர்ந்து  "சிங்கள அரசின் இனப் படுகொலை எதிர்ப்பு மற்றும் ஈழ மக்களும் நல்வாழ்வு" -க்காக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை ஒன்று சேர்த்தது. அத்தனை பேரும் சேர்த்து குரலெழுப்பியதன் பலனாக தமிழக அரசும் தமது பங்களிப்பை தர ஆரம்பித்தது.

மாணவர் புரட்சி எப்போதுமே தோற்றதில்லை என்பதற்கு சமீபத்திய நிகழ்வும் ஒரு உதாரணம்.

எனது நண்பர் பத்மநாபன் அவர்கள், டோக்கியோவில் வாழும் ஜப்பான் வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி, சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் செய்யும் தமிழ் ஈழ மக்கள் மீதான கொடுமைகளை எதிர்த்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக என்னிடம் கூறினார். செய்தியைக் கேட்ட எனக்கு, மனதிற்குள் நிச்சயம் இதில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

நேற்று ஞாயிறு 31-03-2013 காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக நடந்தது.
                            










இந்த உண்ணாவிரத போராட்ட நிகழ்வைக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்  நண்பர் செந்தில்குமார்வெளியிட்ட செய்தி இது...

" இணைய தளங்கள் வாயிலாகவும், சமூகவலைத் தளங்கள் மூலமும், நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன், டோக்கியோ வாழ், இந்திய தமிழர்கள் பெருமளவில் இந்திய தூதரகம் முன்பாக திரண்டனர். இன்று காலை ஜப்பான் நேரம் 9 மணிக்கு சரியாக உண்ணாநிலை அறப்போராட்டம் தொடங்கியது. டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இன்று சகுரா கொண்டாட்டங்கள் நிகழ்ந்தமையால், இந்தியர்களும், ஜப்பானியர்களும் அங்கு திரண்டிருந்தனர். ஈழதமிழர்கள் 60 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் துயரம் குறித்தும், 2009ல் ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் பலகைகளில் எழுதி ஏந்தி நின்றனர் எமது போராட்டகாரர்கள். இது மிகப் பெரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

வானிலை அறிக்கை, மழை நிச்சயம் பொழியும் என்று அறிவித்திருந்தது. கடுங்குளிர் எலும்பை உறைய செய்யும் வகையில் வாட்டிக் கொண்டிருந்தது. இருப்பினும் நெஞ்சிலே தீயை ஏந்தி நிற்கும் எமது தமிழ் சிங்கங்களை இவை என்ன செய்யும்?

1. 2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்(ACCOUNTABILITY). இந்த விசாரணைக்கு, இந்திய அரசாங்கம், முயற்சியெடுக்க வேண்டும்.

2. உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு (UN REFERENDUM) எடுக்கபபட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும். இதற்க்கான முயற்சிகளை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும்.

3. தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் (STOP THE ETHNIC CLEANSING).

4. இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் நிகழும் நிகழ்வுகள், வெளி உலகிற்க்கு தெரியபடுத்தபட வேண்டும். (Reinstate the Press Freedom)

5. இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, இலங்கையின் இனவாத அரசுக்கு, இந்திய அரசாங்கம் செய்து வரும் எல்லா உதவிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். (Stop all Aid)

6. இலங்கைக்கு, இந்தியா செய்து வரும் ராணுவ ரீதியிலான உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது குறித்த எல்லா ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். (Stop Military Aid)

7. 60 ஆண்டுகாலமாக தொடரும் போராட்டத்தினாலும், இனபடுகொலை சம்பவங்களினாலும், இனி தமிழர்களும், சிங்கள மக்களும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத நிலையை எட்டியுள்ளது. இதை இந்தியா புரிந்துக் கொண்டு, தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் ஈழம் குறித்து, ஈழ தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்க உதவ முன்வர வேண்டும்.

8. நிறவெறி கொள்கையினால் முன்பு தென்னாப்பிரிக்கா அரசை உலக அரங்கில் தனிமைபடுத்த எடுக்கபட்ட முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கமே தலைமை தாங்கியது. அதே போல் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை உலக அரங்கில் தனிமைபடுத்தும் முயற்சிகளில் இந்திய அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும்.

9. 2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலைக்கான ஆதாரங்கள் வெளிவந்த பிறகும், இலங்கை அரசை, நட்பு நாடு என்று இந்தியா தொடர்ந்து அழைப்பது, வெந்த புண்ணில், வேலை பாய்ச்சும் செயலாகவே தமிழர்களை பொறுத்த வரையில் இருக்கிறது என்பதை இந்தியா புரிந்துக் கொள்ள வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த உண்ணாநிலை அறப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மொத்தம் 82 இந்தியர்கள் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய தூதரகத்திற்க்கு கொடுப்பதற்க்காக தயார் செய்யப்பட்ட மனுவில் கையெழுத்திட்டனர். இடைப்பட்ட நேரத்தில், அருள், பாலா, கலை, கோவிந்த், சதிஷ், சசிகுமார், செந்தில்குமார், வேல்முருகன், ரகுபதி என பலரும் ஈழபோராட்டத்தின் வரலாற்று குறித்து ஒவ்வொருவரும் தமது புரிதல்களை விளக்கினார்கள். நீண்ட நெடிய போராட்டம் குறித்த இந்த தொடர் விளக்கங்கள், பெரும்பாலானவருக்கு மிக நல்ல திறப்பாக இருந்தது. பாலசந்திரனின் புகைப்படமே என்னை இந்த போராட்டத்திற்க்கு அழைத்து வந்தது என்று கலந்து கொண்ட குழலி என்ற குடும்ப தலைவி நெகிழ்ச்சியுடன் கூறினார். தொடர்ந்து இது மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சசி மற்றும் ரவிசந்திரன் வலியுறுத்தினார்கள். எமது கோரிக்கைகளின் முன் வடிவத்தை முன்மொழிந்த குகன், அறிவிப்பு பலகைகள் தயார் செய்த துரை மற்றும் சேயோன் செந்தமிழன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமது புதிய திரைப்படத்திற்க்காக, படபிடிப்பு தளங்களை தேர்ந்தெடுப்பதற்காக, ஜப்பான் வந்திருந்த இயக்குனர் பி. வாசு, எமது போராட்டம் குறித்து ஹரி அவர்கள் மூலம் அறிந்து, தாமும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டு, தமது டோயோமா பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு டோக்கியோ வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஹரி கணேசன் அவர்கள் இனி தாம் நடத்தும் விழாக்களில் எல்லாம், தமிழீழ பிரச்சனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக கூறினார்.

முடிவாக நன்றி கூறி ஐந்து மணிக்கு உண்ணாநிலை போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது."

இந்தப் போராட்டத்தின் மூலம் நான் அறிந்த விசயம், தமிழர்கள் ஒன்று கூடி, உலகத்தின் ஆன்மாவை உலுக்க தயாராகிவிட்டனர் என்பதே...!
புதிய தலைமுறையில் இந்தப் போராட்டத்தைப் பற்றின செய்தி இது..





இந்தப் போராட்டத்தில் நிறைய சிங்களத்தைப் பற்றியும், ஈழத்தமிழ் மக்கள், இந்திய அரசுப் பற்றி நிறைய கருத்துக்கள் பரிமாறினர். அடுத்தப் பதிவில் அதனைப் பற்றி எழுதுகிறேன்...

Sunday, February 17, 2013

எனது படைப்புகள் : ஜப்பானில் ஒரு இனிய பயணம் - 2

                       * பனி மழையில் ஓர் ஆனந்தம்*
 
ன்று ஞாயிற்றுக் கிழமை. காலை நேரம். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, எனது நண்பரின் செல்ஃபோன் ஒலித்தது. ஃபோனில் அலுவலக நண்பர் "எழுந்து வெளியில் எட்டிப் பார். ஸ்னோ(Snow) வருகிறது.", என்று சொல்லி நண்பரை எழுப்பி விட்டார். அவரின் குரலைக் கேட்டு நானும் எழுந்து வெளியில் எட்டிப் பார்த்தால், வெளியில் இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஸ்னோ எப்படி இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் ஒரு நேரடி அனுபவத்தினைப் பெற நானும் ஆவலாக இருந்தேன்.



கொஞ்ச நேரம் மழையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் மழையோடு கொஞ்சம் பனிச்சிதறல்களும் கீழே விழ ஆரம்பித்தன.

ஆஹா!. அற்புதமாகத்தான் இருக்கிறது. பனி பொழியும் காட்சிகளை ஆரம்பம் முதல் இறுதி வரை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தவாறே எனது கேமராவை எடுக்கத் தயாரனேன்.

சிறு குழந்தையைப் போல் நானும் எனது நண்பரும் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டே கைகளில் விழும் ஒவ்வொரு சிறு சிறு பனிச்சிதறல்களை கண்டு உற்சாகமடைந்தோம்!. முதன் முதலில் பெற்ற அனுபவமாதலால், கொஞ்சம் ஒவராகப் பட்டாலும், அதனைக் கண்டுக்காமல் பனியுடனான எங்கள் உற்சாகத்தை தொடர்ந்தோம்.

ஒரு மணி நேரம் கடந்த பின்பு, பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாகி விட்டது. வீட்டின் மேற்கூரையை பனி முழுவதுமாக மூடிவிட்டது. ரோடு முழுவதும் ஒரே வெண்ணிறம். இன்று முழுவதும் ஆனந்தமாக பனிப்பொழிவை கொண்டாடலாம் என்று நினைத்த போதுதான் சட்டென்று ஞாபகம் வந்தது. இன்று ஆபிஸ் உண்டல்லவா?  என்ன செய்வது? என்று நினைத்துக் கொண்டு,  டோக்கியோ Weather Report- ஐப் பார்த்தேன். severe snow என்று போட்டிருந்தது. சரி எப்படி இருந்தாலும் இன்று ஆபிஸ் போகத்தான் வேண்டும் என்றெண்ணி கிளம்பத் தயாரனோம்.
 
வீட்டை விட்டு வெளியில் வந்து சாலையில் நடக்கும் போதுதான் தெரிந்தது. என்ன ஒரு குளிர்!. யப்பா!., கைகள் எல்லாம் விறைக்க ஆரம்பித்து விட்டன. அவசர அவசரமாக க்ளவுஸ் போட்டுக் கொண்டு சாலையில் நடக்க ஆரம்பித்தோம். பனிப்பொழிவு மிகவும் தீவிரமாக இருந்தது. கையில் வைத்திருந்த குடையில் மேல் பனிபடர்ந்து குடையின் எடையை வேறு அதிகப்படுத்தியது. பனியில் நடந்து நடந்து, காலில் போட்டிருந்த ஷூ-வையும் மீறி குளிர், பாதத்தை தாக்க ஆரம்பித்தது. இருந்தாலும் ஒரு கையில் குடையை பிடித்துக் கொண்டு, மறு கையில் கேமராவைப் பிடித்துக் கொண்டு பனிப் பொழிவை ரெக்கார்ட்(Record) செய்து கொண்டே நடந்தேன்.

                                        Before                                                After

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கும் வெள்ளை நிறம். எங்கும் பனிதான். நடுங்கும் குளிரில்(ஜெர்க்கின் போட்டிருந்தும் கூட) அந்தக் க்ளைமேட்டும், சூழலும் அற்புதமாக இருந்தது.

அலுவலகம் செல்லும் வழியில் எப்போதும் நான் பார்த்துக் கொண்டே செல்லும் அந்த சின்ன தோட்டத்தை இப்போது பார்த்தேன். பனி முழுவதுமாக ஆக்ரமித்து விட்டிருந்தது. நன்றாக விளைந்திருந்த முள்ளங்கி செடிகளும், ப்ரகோலி செடிகளும் இப்போது காணாமல் போய் விட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அளவிற்கு, பனி தோட்டத்து நிலத்தை மறைத்து விட்டிருந்தது.
 
                                 Before                                                    After
 
சாலையில் நடக்கும் போது சில இடங்களில் கால் வழுக்கியது. வேகமாக நடக்காமல் கொஞ்சம் மெதுவாகவே நடந்து சென்றோம். அலுவலகம் சென்றதும், பனியின்மேல் இருந்த கவனத்தை ஒதுக்கி விட்டு, வேலையினை தொடர ஆரம்பித்தேன். இருந்தாலும் சில சமயங்களில் கண்கள் ஜன்னலுக்கு வெளியே பொழிந்து கொண்டிருக்கும் பனியினையே பார்த்தது.
 
இடையில் கிடைத்த ப்ரேக்கில் வெளியில் சென்று நானும் எனது நண்பரும்,  கொஞ்சம் நேரம் பனியுடன் விளையாடினோம். சில போட்டோக்களையும் மறக்காமல் எடுத்துக் கொண்டோம்.

இனி மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு கிடைக்குமா? என்று மனம் அப்போது நினைத்தது. ஆச்சர்யமாக அடுத்த வாரமே மீண்டும் ஒரு முறை பனி பொழிவு வந்தது. இருந்தாலும் முன்பிருந்த தீவிரம் இல்லை. அதற்கப்புறம் சில சமயங்களில் பனி மழை வந்தது. ஆனால் வெளியில் சென்று கைகளை நீட்டி பனியினை தொட்டுப் பார்க்கும் அளவிற்கு மனது இப்போது வரவில்லை. முதல் முறை அற்புதம்!., ஆனந்தம்!., என்றெல்லாம் அதிசயத்த அதே மனது இப்போது எதுவும் செய்யாது வெறுமே வேடிக்கைப் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டது. இதுதான் மனித மனதின் இயல்போ? அல்லது இயற்கையோ?. எதுவோ இருந்தாலும் இதுதான் வாழ்வியல் உண்மை.

மீண்டும் ஒரு இனிய பயண அனுபவத்தை எழுதுகிறேன்.

################################################################